பணி அழுத்தம் காரணமாகவே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் விதிமீறல்களில் ஈடுபட முக்கிய காரணம் என போக்குவரத்து காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

சாலை விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் மட்டும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் முன்னணி உணவு டெலிவரி செய்யும் சேவைகளான ஜொமேட்டோ, ஸ்விகியில் பணியாற்றி வரும் பல டெலிவரி ஊழியர்கள் வசமாக சிக்கியுள்ளனர். சென்னை போக்குவரத்து காவல் துறை நடத்திய அதிரடி வேட்டையில் நேற்று ஒரே நாளில் மட்டும் இத்தனை பேர் விதிமீறிலில் ஈடுபட்டு சிக்கி இருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விழிப்புணர்வு நடவடிக்கை:

மொத்தம் பதியப்பட்ட 978 வழக்குகளில் 581 வழக்குகள் சிக்னல்களில் நிற்காமல் சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனம் ஓட்டுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிக்னல்களில் நிற்காமல் சென்றது மட்டும் இன்றி ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டியது, வேகமாக சென்றது போன்ற விதிமீறல்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அதிவேகமாக டெலிவரி செய்ய வேண்டும் என்ற பணி அழுத்தம் காரணமாகவே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இத்தனை விதிமீறல்களில் ஈடுபட முக்கிய காரணம் என போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெரும்பாலான உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மிக வேகமாக உணவு டெலவரி செய்யப்படும் என கூறுகின்றனர். இதன் காரணமாக உணவை டெலிவரி செய்யும் ஊழியர்கள் வாகனத்தை வேகமாக ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

அபராதம்:

சாலை விதிகளை பின்பற்றவில்லை என ஒரே நாளில் பிடிக்கப்பட்ட 978 டெலிவரி மற்றும் இ காமர்ஸ் ஊழியர்கள் மீது வழ்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் சிக்னல்களில் நிற்காமல் சென்றது, ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டியது போன்ற விதிமீறல்களில் பலர் ஈடுபட்டுள்ளனர். 

நிறுவனங்கள்:

சென்னை போக்குவரத்து காவல் துறையின் விழிப்புணர்வு நடவடிக்கையின் போது நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய 978 ஊழியர்களில் ஸ்விகி முதல் இடம் பிடித்து இருக்கிறது. விதி மீறலில் ஈடுப்பட்டவர்களில் 450 பேர் ஸ்விகி, 278 பேர் ஜொமேட்டோ மற்றும் 188 பேர் டன்சோ நிறுவனத்தில் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவர். 

இதுதவிர அமேசான், ப்ளிப்கார்ட் போன் இ காமர்ஸ் நிறுவனங்களை சேர்ந்த 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்ற 581 பேர், சிக்னலில் கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்தியதாக 131 பேர், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 115 பேர், தவறான பாதையில் சென்ற 70 பேர், போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டிய 20 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 61 பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது.