சென்னை நுங்கம்பாக்கத்தில் நட்சத்திர ஹோட்டலில் சாதாரண தகராறில் ஈடுபட்ட தொழிலதிபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேத்துப்பட்டில் வசிப்பவர் ஹரிகிருஷ்ணா. நேற்றிரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் பாரில் மது அருந்தி விட்டு பில் கவுண்டரில் நின்று பணம் செலுத்தி கொண்டிருந்தார். அப்போது போதையில் வந்த ஆசாமி ஒருவர் இவர் மீது மோதியுள்ளார்.
அது பற்றி ஹரிகிருஷ்ணா கேட்டுள்ளார். அப்போது இருவருக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பார் ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் கார் பார்க்கிங் சென்றதும் அந்த நபர் கைத்துப்பாக்கியை எடுத்து காட்டி ஹரிகிருஷ்ணாவை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு காரில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் பயந்து போன ஹரிகிருஷ்ணா இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பெயர் செய்யத்(48) என்பதும் சூளைமேட்டில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
நேற்றிரவு பாருக்கு வந்த செய்யத் போதையில் தகராறில் ஈடுபட்டதும் , பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு சென்றதும் தெரியவந்தது. தொழிலதிபரான செய்யத் தனது பி.எம்.டபில்யூ காரில் நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு வந்தவர் போதையில் தகராறில் ஈடுபட்டபின் அங்கிருந்து தனது காரை எடுக்காமல் தப்பி சென்று விட்டார்.
பின்னர் போலீசார் நுங்கம்பாக்கம் சென்று அவரது காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். கார் ஆர்.சி.புத்தகத்தை வைத்து சையதின் விலாசத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் சூளைமேடு மேத்தா நகரில் வசிப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
போலீசார் அவர் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டியது, ஆயுத தடை சட்டம் , மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது.
