சென்னையில் பயங்கரம்.. ரூம் போட்டு காதலியை கொன்று வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. நடந்தது என்ன?
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆசிக் (20). பவுசியா (20). இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பவுசியா குரோம்பேட்டை நியூ காலணியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பாலாஜி மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார்.
![Boyfriend killed his girlfriend and posted it on WhatsApp status tvk Boyfriend killed his girlfriend and posted it on WhatsApp status tvk](https://static-ai.asianetnews.com/images/01hgmn253b722vny7pea2wyddb/chennai-murder-6_363x203xt.jpg)
சென்னை குரோம்பேட்டையில் தனியார் ஹோட்டல் அறையில் கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவுசியா (20) கழுத்தை நெரித்து காதலனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆசிக் (20). பவுசியா (20). இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பவுசியா குரோம்பேட்டை நியூ காலணியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பாலாஜி மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவுசியா மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் கேரளாவில் இருந்து வந்த காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.
பின்னர் நேற்று காலை 11 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில், மாலை 4 மணியளவில், தனக்கும் காதலிக்கும் தகராறு ஏற்பட்டதால் பவுசியாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக ஆசிக் செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பவுசியாவின் தோழிகள் குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அறையில் சென்று பார்த்த போது மாணவி பவுசியா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனையடுத்த பவுசியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலியைக் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற காதலன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பவுசியா16 வயது இருக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அதனால் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த கேரளா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறை அடைத்துள்ளனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இருவருக்கும் பிறந்த குழந்தை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் சென்னையில் இருந்த தனது காதலியை பார்க்க ஆசிக் வந்துள்ளார். அப்போது இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி தனிமையில் இருந்த போது மாணவி யதார்த்தமாக காதலன் செல்போனை எடுத்து பார்த்த போது பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மாணவியை கொலை செய்துவிட்டதாக இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.