மண்டலச் செயலாளர் படுகொலை..! 50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறிய ஹச்.ராஜா..!
திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகு குடும்பத்தினரை நேரில் சந்தித்து அக்கட்சி சார்பாக 50 ஆயிரம் நிதியுதவியை தேசிய செயலாளர் ஹச்.ராஜா வழங்கினார்.
திருச்சி மாவட்டம் பாலகரையைச் சேர்ந்தவர் விஜயரகு. அரசியல் பிரமுகரான இவர் திருச்சி மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் அவர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் விஜயரகுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
அதை சற்றும் எதிர்பார்க்காத விஜயரகு, மர்ம கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றிருக்கிறார். ஆனால் அவரை விடாமல் துரத்திய மர்ம கும்பல் மேலும் பல இடங்களில் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதில் படுகாயமடைந்த விஜயரகு ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைக்கண்டு அதிச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயரகுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் விஜயரகு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். செல்போன் திருட்டு தொடர்பான மோதலில் விஜயரகு கொலைசெய்யப்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மொபைல் லாட்டரி வியாபாரி முகமது பாபு என்கிற மிட்டாய் பாபு என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அவருடன் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பவர்களும் தேடப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா கொலைசெய்யப்பட்ட விஜயரகுவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் தமிழக பாஜக சார்பாக 50 ஆயிரம் நிதியுதவியை விஜயரகுவின் மனைவியிடம் ஹச்.ராஜா வழங்கினார். அவருடன் திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.