பெங்களூருவில் இரவு நேரத்தில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி உதவியுடன் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். 

பெங்களூரு சீனிவாசநகரில் வசிக்கும் 26 வயது பெண் ஒருவர் இரவு தனது ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து அவரது கணவர் காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது காமாட்சிபாளையா பகுதியில் சென்ற போது சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் ஸ்கூட்டரை பெண் மெதுவாக ஓட்டினார். திடீரென ஸ்கூட்டர் முன்பு வந்து நின்ற வாலிபர் ஒருவர் பெண்ணின் உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு மின்னல் வேகத்தில் சென்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை பார்த்து காரில் வந்த பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காரில் இருந்து இறங்கி அவரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பித்துவிட்டார். இதுகுறித்து 112 எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஹீரோஹள்ளியை சேர்ந்த வினோத் (27) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதற்காக அவர் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.