சென்னையில் ஏ.சி. எந்திரம் வெடித்துச் சிதறி விபத்து ! உடல் கருகிய கணவன் – மனைவி !!
சென்னை போரூரில் மின்கசிவு காரணமாக ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததில் கணவனும், மனைவியும் தீயில் கருகினர். இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை போரூர், சக்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரகாஷ் மேனன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிந்து மேனன் . இவர்களுக்கு கிரன்மேனன், ஆதித்யாமேனன் என 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் மகன்கள் தூங்கினர். ஹாலில் ஓடிக்கொண்டிருந்த ஏ.சி. எந்திரத்தை அணைக்காமல் மற்றொரு அறையில் பிரகாஷ் மேனன், அவரது மனைவி பிந்து மேனன் ஆகியோர் தூங்கச்சென்றனர்.
தொடர்ந்து ஏ.சி. ஓடிக்கொண்டு இருந்ததாலும், குறைந்த மின்அழுத்தம் காரணமாகவும் மின்கசிவு ஏற்பட்டு நேற்று அதிகாலை ஏ.சி. வெடித்து தீப்பிடித்தது. இதையடுத்து அதில் இருந்து கிளம்பிய புகை வீட்டிற்குள் பரவியது.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பேரும் அறையில் இருந்து எழுந்து வெளியே வந்தனர். அப்போது ஹாலில் இருந்த சோபா, டி.வி. உள்ளிட்டவை தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
புகை அதிகமாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெளியே செல்ல முடியாமல் பால்கனிக்கு வந்து சத்தம் போட்டனர்.இதையடுத்து 2 மகன்களும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
அப்போது கணவன், மனைவி இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் ரோந்து பணியில் இருந்த போரூர் போலீசார் விரைந்து வந்து பால்கனி வழியாக 4 பேரையும் உயிருடன் மீட்டனர்.
மேலும் தீக்காயம் அடைந்த பிரகாஷ் மேனன், பிந்து மேனன் ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விசாரணையில் நீண்ட நேரம் ஏ.சி. எந்திரம் ஓடிக்கொண்டு இருந்ததாலும், இரவு நேரங்களில் குறைந்த மின்அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததாலும் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் அருகே ‘பிரிட்ஜ்’ வெடித்து பத்திரிக்கையாளர் பிரசன்னா அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் பலியானது குறிப்பிடத்தக்கது.