நாகையில் திருமணமான ஆட்டோ ஓட்டுநரை காதலித்து குடும்பம் நடத்தி ஏமாற்றப்பட்ட 16 வயது சிறுமி தீ குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பண்டகசாலை தெருவைச் சேர்ந்த ஜஹாங்கிர் - ஜெனிபர் சோபியா தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் வேளாங்கண்ணியில் துணி வியாபாரம் செய்து வரும் வருகின்றனர். இவர்களின் மகள் வேதாரண்யம் குருகூலத்தில் 10 ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதியுள்ள நிலையில் குடும்ப வறுமை காரணமாக வேளாங்கண்ணியில் உள்ள பல்பொருள் அங்காடி கடையில் வேலை பார்த்து வந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பணி முடிந்து தினமும் செருதூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரின் ஆட்டோவில் வீட்டிற்கு வந்த சிறுமிக்கு அவரோடு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தனக்கு திருமணமானதை மறைத்து ஆசை வார்த்தைகளை கூறி ராஜேஷ்குமார் சிறுமியுடன் பழகி அவரை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.

புதுவையில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை; போலீசார் தடியடி

ஒருகட்டத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரியவர இருவரும் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருப்பூருக்கு சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் சிறுமியின் தந்தை ஜஹாங்கிர் இதுகுறித்து ராஜேஷ்குமார் மீது வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளார். ஆனால், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் இந்த விவகாரத்தில் விவகாரத்தில் காவல்துறையினர் தொடர்ச்சியாக அலட்சியம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. 

மகள் எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் தேடிக்கொண்டு இருந்த நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி சிறுமியின் தாய் ஜெனிபர் சோபியாவுக்கு போன் செய்த ராஜேஷ்குமார் உங்கள் மகள் எரிந்துகொண்டு இருக்கிறாள் என்றும், சிலிண்டர் வெடித்து விட்டதாகவும் நாகை அரசு மருத்துவமனைக்கு வருமாறும் கூறியுள்ளார்.

இதனை கேட்ட சிறுமியின் பெற்றோர், அலறியடித்து நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது சிறுமி உடல் முழுவதும் எரிந்து மிக மோசமான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். அங்கு என்மகளை என்ன செய்தாய்? என பெற்றோர் ராஜேஷ்குமாரிடம் கதறி அழுதுள்ளனர். ஆனால் ராஜேஷ்குமார் அலட்சியமாக இருந்ததுடன் பெற்றோர்களிடம் சிறுமியை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று தலைமறைவாகியுள்ளார்.

மகா சிவராத்திரி; கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் நடந்த உண்மையை கூறுமாறு கேட்டபோது, ராஜேஷ்குமார் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவனால் தான் நான் தீ குளித்துக் கொண்டேன் என்றும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்த பெற்றோர், ராஜேஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாகை எஸ்பி ஹர்ஷிங்கை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து நாகை எஸ்பி போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு பிறகு ராஜேஷ்குமார் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வேளாங்கண்ணி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

85 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ள சிறுமி அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவருடைய உடல்நிலை மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக பெற்றோர்கள் கண்ணீருடன் கூறுகின்றனர். ஏற்கனவே திருமணமான ஆட்டோ டிரைவரின் காதல் வலையில் சிக்கிய 16 வயதேயான பெண் குழந்தை 85 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்ற சம்பவம் நாகையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ராஜே்ஷ் குமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.