1500 ரூபாய் கடனுக்காக சிறுவன் கொடூர கொலை… மதுரையில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள்…. மக்கள் அச்சம் ….
மதுரையில் 1500 ரூபாய் கடனுக்காக நடந்த மோதலில் 17 வயது சிறுவனை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். 17 வயதான இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு இவர் தனது ஊரை சேர்ந்த நண்பரான முத்து என்ற சூரியாவிடம் 1,500 ரூபாய் கடனாக வாங்கியிருந்தார். அதன்பிறகு கடனை சதீஸ்குமார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் தீபாவளி பண்டிகையையொட்டி சதீஸ்குமார் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது முத்து தனக்கு கொடுக்க வேண்டிய கடனை திரும்ப தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் நேற்று முன்தினம் இரவு சதீஸ்குமாரை முத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சத்தீஷ்குமார் தன்னை முத்து தாக்கியதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்களும் இதுகுறித்து கேட்பதற்காக சதீஸ்குமாரை அழைத்து கொண்டு தெற்குவாசல் பாலம் அருகில் சென்றனர். அங்கு முத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சதீஸ்குமார், அவரது நண்பர்களை அழைத்து வருவதை பார்த்த முத்து ஆத்திரம் அடைந்தார். பின்னர் கடன் குறித்து பேசும்போது மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
அப்போது முத்துவும், அவரது நண்பர்களும் சேர்ந்து சதீஸ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த சதீஸ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரைவீரன்,நித்யானந்தன், பூபதி மற்றும் சத்தீஷ்குமார் ஆகிய 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மதுரை கொலை நகராமாக மாறி வருவதாகவும் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.