தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போதையில் 68 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த போதை ஆசாமிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் அம்பேத்கர் நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கனி. இவரது மனைவி அந்தோணியம்மாள். கணவர் கனி மற்றும் மகன் இறந்துவிட 68 வயது மூதாட்டியான அந்தோணியம்மாள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அக்கம்பத்தில் இருப்பவர்கள் வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை அடுத்து அந்த பகுதிக்கு வந்த வடபாகம் காவல்துறையினர் அந்தோணியம்மாள் வீட்டில் உள்ளே நுழைந்து பார்த்தபோது மூதாட்டி அந்தோணியம்மாள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மேலும் அவரது கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அந்தோணி அம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் இன்று தடவியல் காவல்துறையினர் அந்தோணியம்மாள் வீட்டில் சோதனை செய்யும் போது வீட்டிற்கு வெளியே பித்தளை தோடுகளை அந்த கும்பல் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அந்தோணியம்மாள் வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை கஞ்சா போதை கும்பல் அவரது வீட்டில் இருந்து 5 பவுன் நகை மற்றும் பொருட்களை திருடியதுடன் அவரது வீட்டின் உள்ளே புகுந்து மது குடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இது தொடர்பாக இரண்டு முறை அந்தோணியம்மாள் அந்த பகுதி பெரியவர்களுடன் இணைந்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறை இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவல்துறை நடவடிக்கை எடுக்காததன் காரணமாக துணிந்த கஞ்சா போதை கும்பல் நேற்று வீட்டில் தனியாக இருந்த அந்தோணி அம்மாளை கொடூரமாக கற்பழித்து அவர் கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகளை திருடி கொலை செய்துள்ளனர். 

எனவே காவல்துறை அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் புலிகள் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் கத்தார் பாலு குற்றம் சாட்டியுள்ளார்