500 பேர் கூடி ஹெச்.ராஜா மீது கொலை வெறி தாக்குதல்... பரபரப்பு குற்றச்சாட்டு..!
அண்மையில் என்மீது கூட இளையாங்குடியில் 500 க்கும் மேற்பட்டோர் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள்.
அண்மையில் தன் மீது இளையாங்குடியில் 500 க்கும் மேற்பட்டோர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இராமநாதபுரத்தை சேர்ந்த அருண் பிரகாஷ் என்கிற இளைஞர் இந்து முன்னணி கமிட்டி பொறுப்பாளராக இருக்கிறார். கடந்த 30-ம் தேதி அருண்பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் யோகேஸ்வரன் ஆகியோரை மர்ம நபர்கள் கத்தியால் குத்துவிட்டு தப்பியோடி விட்டனர். படுகாயமடைந்த அருண்பிரகாஷ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்து முன்னணி கமிட்டி பொறுப்பாளர் அருண் பிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்தார். 10 முஸ்லீம் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
ஆனால், இந்த கொலை சம்பவம் மத மோதலினால் நடைபெறவில்லை என்றும், முந்தைய பகை காரணமாக கொலை நடந்திருக்கிறது என ராமநாதபுரம் தகவல் வெளியிட்டு இருந்தது. இதனையடுத்து, இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முகமது ரியாஸ், காமாட்சி, சுரேஷ் மற்றும் ஷாஹுல் ஹமீத் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, ’’இந்து முன்னணி கமிட்டி பொறுப்பாளர் அருண் பிரகாஷை கொலை செய்தவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. கொலை செய்தவர்களின் வீடுகளுக்கு காவலர் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இதனை கேட்டால், ஹிந்து மக்கள் எப்படி பொறுமையாக இருப்பார்கள். மக்கள் பிரதிநிதி என்கிற பேரில் ராமநாதபுரம் மாவட்டம் தேச துரோகி கையில் சிக்கி உள்ளது.
இந்துக்களில் குரலாக நான் இருப்பதால், என் பெயரை கெடுக்க பார்க்கிறார்கள். உடனடியாக உண்மை காரணம் வெளியே வரவேண்டும். அண்மையில் என்மீது கூட இளையாங்குடியில் 500 க்கும் மேற்பட்டோர் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள். அந்த வழக்கிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசிய புலனாய்வு அமைப்பிடன் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும். இந்த சம்பவம் ராமநாதபுரம் காவல்துறைக்கு அவமானம்’’ என அவர் தெரிவித்தார்.