திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே இரவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களால், பொதுமக்களிடையே அதிர்ச்சியும், அச்சமும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

திண்டுக்கல் மாவட்டம், முருகபவனம் அருகே வசித்துவரும் லோடுமேன் சிவக்குமாரின் மகன் பிரபாகர் பெயின்டராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீடு புகுந்து கழுத்தை அறுத்து பிரபாகரனை கொலை செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதேபோல், நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கதிரயன் குளம் அருகே முன் விரோதம் காரணமாக சிவா என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புளியமரத்துசெட் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுநாடார். இவருக்கு ஈஸ்வரன்(55). மகேந்திரன்(50) என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியதை அடுத்து அண்ணன் ஈஸ்வரன், தம்பி மகேந்திரனை நுங்கு வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தம்பி ஓடிவிட்டார்.

 இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மகேந்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே இரவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களால், பொதுமக்களிடையே அதிர்ச்சியும், அச்சமும் ஏற்படுத்தியுள்ளது.