சீர்காழி அருகே சிறுமி ஒருவர் தோப்புக்குள் ரத்த காயங்களுடன் கிடந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே இருக்கிறது சித்தன்காத்திருப்பு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயது சிறுமியான இவர், நாங்கூரில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்துள்ளார். தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சம்பவத்தன்றும் ரேவதி பள்ளிக்கு சென்றுள்ளார். மாலை வீடு திரும்பிய பிறகு அங்கிருக்கும் தோப்புக்கு ஒன்றிற்கு ரேவதி சென்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது தோப்பு பகுதியில் சிறுமி ரத்த காயங்களுடன் கிடப்பதாக தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது சிறுமி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதைக்கேட்ட சிறுமியின் பெற்றோர் செய்வதறியாது கதறி துடித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த காவலர்கள் வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி தோப்புக்குள் படுகாயங்களுடன் கிடந்ததால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.