பொதுத்தேர்வுக்கு பயந்து வேலூரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுத்தேர்வுக்கு பயந்து வேலூரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அரியூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த கோபி என்பவரின் மகன் மோனிஷ். 16 வயதான இவர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தாய் பரிமளா ஷு கம்பெனியில் வேலைக்கு சென்று மோனிசை படிக்க வைத்தார். நேற்று மாலை பரிமளா ஷு கம்பெனியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது மோனிஷ் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தேர்வுக்கு பயந்து மாணவர் மோனிஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இன்று முதல் நாள் 12 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான தேர்வு துவங்கிய நிலையில் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுத சென்றனர். இந்த நிலையில் இன்று தேர்வு தொடங்குவதால் மாணவன் மோனிஷை படிக்குமாறு பரிமளா அறிவுரை வழங்கினார். இதனையடுத்து மோனிஷ் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார். மகன் தேர்வுக்கு படிக்கிறான் என நினைத்து பரிமாளாவும் அந்த அறைக்கு செல்ல வில்லை. ஆனால் அறையில் இருந்த மோனிஷ் தேர்வுக்கு பயந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மோனிஷ் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்டநேரமானதால் மோனிஷ் அறைக்கதவை திறந்து பரிமளா உள்ளே சென்றார். அங்கு மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில் மாணவன் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.