11ம் வகுப்பு பள்ளி மாணவனை கொலை செய்தது இதற்கு தான்.. நண்பர் பரபரப்பு வாக்குமூலம்..!
இரவு கோகுலுடன் படிக்கும் மற்றொரு மாணவர் டூவீலரில் அவரது வீட்டுக்கு வந்து அவரை அழைத்தார். ஆனால், கோகுலின் தாய் ஜெயபாரதி இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என்று கூறினார்.
திருக்கோவிலூர் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெங்களூரில் லாரி டிரைவராக உள்ளார். இவரது மகன் கோகுல் (17). திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோகுலுடன் படிக்கும் மற்றொரு மாணவர் டூவீலரில் அவரது வீட்டுக்கு வந்து அவரை அழைத்தார். ஆனால், கோகுலின் தாய் ஜெயபாரதி இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என்று கூறினார். எனினும் கோகுல் அந்த நண்பருடன் சென்றார். இந்நிலையில், வெகு நேரமாகியும் கோகுல் திரும்பி வராததால் தாயார் ஜெயபாரதி, செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறத்தில் தலை, கை, கழுத்து மற்றும் வயிறு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கோகுல் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி துடித்தனர். தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் விரைந்து சென்று கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கோகுலை அழைத்து சென்ற நண்பர் அருண் ஆகாஷ் (17) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தன்னை அடிக்கடி கேலி கிண்டல் செய்ததால் கோகுலை கொலை செய்ததாக தெரிவித்தார். எனினும் இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.