கலைஞர் உடல் நலம் குறித்து சர்ச்சை ட்விட் போட்டது ஏன்...! யோகி பாபு கூறிய விளக்கம்..!
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய போராட்டங்களை கடந்து இன்று முன்னணி காமெடி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றிருப்பவர் நடிகர் யோகி பாபு.
முன்பெல்லாம் சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்த இவர், தற்போது நயன்தாராவுடன் 'கோலமாவு கோகிலா' , விஜய்யுடன் 'சர்கார்' மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் வரிசையாக கமிட் ஆகி வருகிறார்.
இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நலம் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, கிண்டல் செய்யும் விதத்தில் நடிகர் யோகி பாபு ஒரு கருத்தை வெளியிட்டதாக ஒரு தகவல் வைரலாக பரவியது. இந்த பதிவில் "தன்னை பார்க்க வந்த ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமாரின் உடல் நலனை விசாரித்து அனுப்பி வைத்தார் கலைஞர் என்று இருந்தது".
இவரின் இந்த ட்விட் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டும் இன்றி பலரது விமர்சனங்களையும் பெற்றது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள யோகிபாபு, தன்னுடைய பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, அரசியல் தலைவர்கள் கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்கள். உண்மையில் அப்படிப்பட்ட ஒரு கருத்தை நான் சொல்லவேயில்லை. தன்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டு இது போன்ற தகவல்கள் பரப்பபட்டு வருவதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தான் எந்த அரசியல் கட்சியிலும் நான் இல்லை என்றும் யோகி பாபு தெரிவித்துள்ளார்.