உத்தர பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு வரிவிலக்கு - அதிரடியாக அறிவித்தார் முதல்வர் யோகி ஆதித்தியநாத்
சுதிப்தோ சென் இயக்கிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கேரளா ஸ்டோரி. சுதிப்தோ சென் இயக்கிய இப்படம் கடந்த மே 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தில் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்களை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று மதமாற்றம் செய்து அவர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இதன் காரணமாக தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இப்படத்தை திரையிட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தமிழ்நாட்டில் இப்படம் திரையிடுவதை நிறுத்திவிட்டனர். அதேபோல் மேற்கு வங்கத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வட மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படியுங்கள்... தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா! ஏன் தெரியுமா?
அதன்படி மத்திய பிரதேசம் மாநிலம் தான் முதலில் இப்படத்திற்கு வரிவிலக்கு அறிவித்தது. இந்நிலையில், அடுத்தபடியாக பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்திலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார். இதனை இன்று காலை டுவிட்டரில் அவர் பதிவிட்டு இருந்தார்.
அதுமட்டுமின்றி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் அம்மாநில அமைச்சர்களுடம் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கண்டுகளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேசத்தை தொடர்ந்து உத்தரகாண்டிலும் இப்படத்திற்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... கஸ்டடி முதல் சாகுந்தலம் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீசா? - முழு லிஸ்ட் இதோ