சமூகத்தில் பெண்களுக்கு சுதந்திரத்தை விடவும் மரியாதை தான் தேவை – ஆண்ட்ரியா
முன்னணி நடிகையர் எவரும், நடிக்க தயங்கும் வேடத்தில் நடித்து தரமணி படத்தில், ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார் ஆண்ட்ரியா.
சமீபத்தில் அவர் கொடுத்த நேர்காணலில் தரமணி பற்றியும் பெண்கள் பற்றியும் மனம் திறந்தார்.
அவர், “ஹீரோயினுக்கு தரமணியில் கிடைத்தது போன்ற ஒரு ரோல் கிடைப்பது அபூர்வம். இயக்குனர் ராம், ஒரு கதையை எழுதி, அதை அழகாக காட்சிப்படுத்தி உள்ளார். என்னை இந்த படத்தில் நடிக்க வைத்ததற்கு, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
இந்த படத்தை பொறுத்தவரை, வெறும் அம்மா ரோல் மட்டும் இல்லை, பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நிறைய சொல்லியிருக்காங்க. அதனால், இந்த கதையை கூறியபோது, சிறிதும் தயங்காமல் நடிக்க சம்மதித்தேன்.
கிராமப்புறங்களில் வயதானவர்கள், இன்னும் சுருட்டு புகைக்கின்றனர். இன்னொரு படத்தில் பைக் ஓட்டும் காட்சியில் நடிக்கிறேன். என்னை கேட்டால், சிகரெட்டை விட, பைக் ஓட்டுவது ரொம்ப கஷ்டம்.
ஐ.டி., நிறுவனத்தில், நான் வேலை பார்த்தது இல்லை; பைக் ஓட்டியது இல்லை. படத்தில் காட்டியது போல், என் நிஜ வாழ்க்கையில் எதுவுமே நடக்கவில்லை. படத்தில் என் நடிப்பை பார்த்து விட்டு, நிஜ வாழ்க்கையிலும் இந்த பொண்ணு, இப்படித்தான், என்ற முடிவுக்கு வர வேண்டாம்.
பெண்கள், இந்த சமூகத்தில் மிக மரியாதையாக நடத்தப்பட வேண்டும். அதைத் தாண்டி, பெண்கள் சுதந்திரம், அது, இது என்றெல்லாம் பேச விரும்பவில்லை. மரியாதை கிடைத்தால் போதும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு வேண்டும்.
விருது வாங்குவதற்காக படங்களில் நடிக்கவில்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை. நல்ல படங்களில் நடிக்கிறேன்; விருது கிடைத்தால் மகிழ்ச்சி” என்று அந்த நேர்காணலில் அசத்தினார் ஆண்ட்ரியா.