Daniel Balaji: பெற்ற தாயின் ஆசை! மாரியம்மனுக்கு கோவில் கட்டியது எப்படி?டேனியல் பாலாஜி! பலரும் அறிந்திடாத தகவல்
தன்னுடைய அம்மா ஆசையை நிறைவேற்றுவதற்காக 'ரத்தூர் மாரியம்மன் கோவிலை' கட்டிய டேனியல் பாலாஜி, இந்த கோவில் உருவானது எப்படி என பகிர்ந்து கொண்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு புரோடக்ஷன் மேனேஜராக பணியாற்றி, பின்னர் சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு கேரியரை துவங்கியவர் டேனியல் பாலாஜி. தன்னுடைய அண்ணன் முரளி ஒரு முன்னணி நடிகர் என்றாலும் அவருடைய உதவியை நாடாமல், தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு, முன்னணி வில்லன் நடிகராக மாறினார்.
டேனியல் பாலாஜி, தமிழில் நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான 'ஏப்ரல் மாதத்தில்' திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பின்னர் கமலஹாசன் உடன் வேட்டையாடு விளையாடு, தனுஷுக்கு வில்லனாக 'பொல்லாதவன்', விஜய்க்கு வில்லனாக 'பைரவா', 'பிகில்' போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.
திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான இவர்... தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 48 வயதே ஆகும் டானியல் பாலாஜி, நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய இழப்பு தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவருடைய உடல் புரசைவாக்கத்தில், டேனியல் பாலாஜி பிறந்து வளர்ந்த சொந்த வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இவரை பற்றிய பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
அந்த வகையில் மாரியம்மனுக்கு கோயில் ஒன்றை கட்டி கொடுத்தது பற்றி இவரே பேசியுள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசி உள்ள டேனியல் பாலாஜி. பல ஆய்வுகள் செய்த பின்பு தான் கோயில் கட்டப்பட்டதாகவும், கட்டப்படுவதற்கு முன் கோவில் வரலாறு பற்றி தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். கோவில்களை பொறுத்தவரை சவுண்ட் எனர்ஜி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே ரத்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும், அந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகவும்... சிறுவயதில் இறை நம்பிக்கை பெரிதாக இல்லை என்றாலும், பின்னர் அந்த நம்பிக்கை மீதான உணர்வு ஏற்பட்டது. அதேபோல் சிறுவயதில் இருந்தே, அது வேண்டும்... இது வேண்டும்... என நான் வேண்டியது இல்லை. கடவுள் என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய அதிகபட்ச வேண்டுதலாக இருந்துள்ளது. கோவில் கட்ட காரணம் எனக்கு இருந்த ரசனை மட்டுமே. எதிலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். என்னுடைய இறை தாய்க்கு நான் கட்டிக் கொடுத்த வீடு தான் இந்த கோவில். மேலும் தன்னுடைய அம்மாவின் ஆசையும் நான் கட்டிய கோவிலின் மூலமாக நிறைவேறி விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.