மனோரமாவிற்கு மணி மண்டபம் கட்டவேண்டும்: இயக்குனர் முத்துராமன் கோரிக்கை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அடையாரில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
இந்த விழாவுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த விழாவில் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் முத்துராமன் கொடுத்துள்ள பேட்டியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்தது போலவே, 1000திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடிப்பில் சிறந்து விளங்கிய நடிகை மனோரமாவிற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.