விஸ்வரூபம் – 2 படத்துக்கு தடையா? முட்டல், மோதல் தொடங்கியது !!
கமல்ஹாசன் இயக்கி, நடித்து இம்மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ள விஸ்வரூபம் -2 படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என சாய்மீரா பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக கமல்ஹாசனுக்கு, சாய்மீரா நிறுவனம் ரூ.6.90 கோடி வழங்கியது..
அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே இது தொடர்பாக ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும் என சாயிமீரா நிறுவனம் சீதிமன்றத்தை நாடியுள்ளது..
அந்தப்பணத்தை கொடுக்க முடியாத பட்சத்தில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. படம் வெளியிட இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் விஸ்வருபம் 2 க்கு ஏற்பட்டுள்ள சிக்கல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.