பேச்சுரிமை , எழுத்துரிமை எனபது இல்லையா , விஷால் மீதான சஸ்பெண்டை திரும்ப பெறுகிறீர்களா? அல்லது உத்தரவு பிறப்பிக்கவா என்று தலைமை நீதிபதி நடிகர் விஷால் மீது எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறுவது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திடம் பதிலை பெற்று நாளை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளார்.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கம் குறித்து சர்ச்சைக்குரிய பேட்டி அளித்திருந்தார். அது குறித்து மன்னிப்பு கேட்காவிட்டால் நடவடிக்கை எடுக்க போவதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் குறித்த காலக்கெடுவுக்குள் விஷால் மன்னிப்பு கேட்காததால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். பின்னர் நீக்கம் செய்து உத்தரவிட்டனர். 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி கல்யாண சுந்தரம் தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

 அப்போது, நடிகர் விஷால் தரப்பில், தனிப்பட முறையில் தான் யாரையும் விமர்சிக்கவில்லை எனவும், அவ்வாறு இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மனு தாக்கல் செய்து உள்ளதாக வாதிடப்பட்டது.

இதனையடுத்து, தலைமை நீதிபதி, அனைவரும் பேச்சுரிமை உள்ளது. எதிர்த்து பேசுவதற்கு இந்த நடவடிக்கைகள் என்றால் சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் பேசுபவர்கின்றவர்கள் மீது எல்லாம் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று தயாரிப்பாளர் சங்க வழக்கறிஞரிடம் சங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவருக்கு எதிரான நடவடிக்கை திரும்ப பெற வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு அறிவுறுத்தினர். இல்லையென்றால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது தாயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கறிஞர், இது குறித்து கேட்டு பதிலளிப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.