அடுத்தடுத்து படங்கள்... ஜெட் வேகத்தில் பறக்கும் விஷால்! அடுத்து பிரபல இயக்குநருடன் கூட்டணி!..
சுந்தர் சி இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால், தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஆக்ஷன்'. இது, சுந்தர் சி படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன் வந்த இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.
இதனையடுத்து, அடுத்தடுத்த படங்களில் வேகம் காட்டத் தொடங்கியுள்ளார் விஷால்.'ஆக்ஷன்' படத்தை தொடர்ந்து, தற்போது மிஸ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்-2' படத்தில் நடித்து வருகிறார் விஷால்.
இந்த படத்தில் விஷாலுடன் பிரசன்னா, கௌதமி, ரகுமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 'துப்பறிவாளன்-2' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் நடிக்கும் அதேவேளையில்,புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கும் புதிய படத்திலும் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். 'சக்ரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஷ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா , ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இவ்விரு படங்களையும், விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. 'துப்பறிவாளன்-2', 'சக்ரா' ஆகிய இரு படங்களும் ஒரே நேரத்தில் தயாராகி வரும் நிலையில், மற்றொரு புதிய படத்திலும் நடிக்க விஷால் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை 'அரிமா நம்பி', 'இருமுகன்' மற்றும் 'நோட்டா' ஆகிய ஹிட் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும், படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஆனந்த் சங்கர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. விஷால் ஆனந்த்சங்கர் முதல் முறையாக இணையும் இந்தப் படமும் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது.