கன மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து வரும் விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு!
விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாக வேண்டிய திரைப்படங்கள்.
விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை. இதனால் விஷாலுக்கு நஷ்டம்தான். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து சண்டகோழி-2ன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இரும்புத்திரை படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு அக்டோபர் 29ம் தேதி ஆரம்பித்து கன மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரிச்சி ஸ்ட்ரீட் மற்றும் மவுண்ட் ரோட் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இரும்புத் திரையை பொங்கலுக்கு (2018) வெளியிட வேண்டும் என்பதால் படத்தின் படப் பிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடர்ந்து இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெற்று வருகிறது .
விஷால் நடிப்பில் , இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இரும்பு திரை படத்தில் சமந்தா , ஆக்சன் கிங் அர்ஜுன் , ரோபோ ஷங்கர் , வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விஷால் இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.