அப்பா விக்ரமை பெருமைப்படுத்திய மகன் துருவ்... உருக வைக்கும் பதிவு...
அப்பா விக்ரமை பெருமைப்படுத்தும் விதமாக மகன் துருவ விக்ரம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருகவைக்கும் பதிவைப் போட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான "அர்ஜுன் ரெட்டி" படத்தை த்ருவ் விக்ரமை வைத்து "வர்மா" என்ற பெயரில் இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். ஆனால் படத்தை பார்த்து விட்டு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பாலா இயக்கிய இப்படம் துளி கூட அர்ஜுன் ரெட்டியுடன் கொஞ்சம் கூட ஒத்து போகவில்லை, படு மொக்கையான மேக்கிங் என குப்பையில் தூக்கிப் போட்டது.
காசு செலவானாலும் பரவாயில்ல இதை சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்பதால், புதிய இயக்குனர் மற்றும் குழுவுடன் சேர்ந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்த உள்ளோம் என அறிவித்திருந்தனர். இதையடுத்து அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் உதவியாளராக இருந்த கிரிசாயா த்ருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் சொன்னதைப் போலவே 50 நாட்களில் படத்தை எடுத்து முடித்தனர்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஆதித்ய வர்மா படத்தின் டீஸர் வெளியாகி புதுமுக ஹீரோ என்பது கூட தெரியாமல் பாலா இயக்கி வெளியிட்ட "வர்மா" பட டீசரை விட பக்காவாக செம ஸ்டைலிஷாக வந்துள்ளதாக ரசிகர்கள் கூறிவந்தனர். தன்னுடைய வேலைகளை நிறுத்தி வைத்துவிட்டு, இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த 50 நாள் முழுவதும் தனது மகன் துருவ்வுடன் விக்ரம் கூடவே இருந்து பார்த்துக் பார்த்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் துருவ் விக்ரம், தனது அப்பா விக்ரம் குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “என்னோடு ஒவ்வொரு நாளும் வந்ததற்கு, விட்டுக்கொடுக்காமல் இருந்ததற்கும், எப்போதும் நான் சிறப்பாகச் செயல்பட என்னை உந்தியதற்கும், எல்லோரும் சிறப்பாகச் செயல்படுவதற்கும் , லட்சியத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததற்கு, எதிர்காலத்தைப் பற்றி தெளிவாக இருந்ததற்கும், நான் நம்பிக்கை இழப்பதை அனுமதிக்காமல் இருந்ததற்கும், எனக்காக ஆதித்யா வர்மாவைத் தந்து உருவாக்கியதற்கும், முடிந்த எல்லா உதவியையும் செய்ததற்கும் , உங்களுக்குத் தெரிந்த அத்தனையையும் தொடர்ந்து எனக்குக் கற்றுத் கொடுத்ததற்கும்... நீங்கள் இல்லாமல் இது எதுவுமே சாத்தியமில்லை.
மேலும், இந்தப் படத்துக்காக ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்தீர்கள் என்பதைத் தெரிந்த ஒருவர், டீஸரில் உன் அப்பா பெயர் எங்கே என்று கேட்டார். அதற்கு நான் என் பெயருக்குப் பின்னாலும், நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் இருக்கிறது அவருடைய பெயர் என்றேன். தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா. உங்களைப் பெருமைப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.