சூப்பர் ஸ்டாருக்கு தாதா சாகேப் பால்கே விருது... கேப்டன் விஜயகாந்த் ட்விட்டரில் வாழ்த்து...!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அவரது ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வந்தனர். மேலும் முதலமைச்சர் எடப்பாடி, மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் போனில் வாழ்த்து கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர் என பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து கூறியதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மதிப்புக்குரிய எதிர்க்கட்சி தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகை நண்பர்களுக்கும் என்னுடைய நலன் நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் இன்று காலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " உங்கள் அனைவருடைய, அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி, புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், எனது திரைப்பட சகோதரத்துவ நண்பர்கள் மற்றும் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடக நண்பர்கள், என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கிய ஒவ்வொரு நபருக்கும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான ரசிகர்கள், அனைவருக்கும் தன்னுடைய அடி மனதில் இருந்து நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று, “இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அண்ணன் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு, எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து கலைத்துறையில் சேவைசெய்து பல உயரிய விருதுகள் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். அத்துடன் இருவரது சந்திப்புக்கள் குறித்த பழைய புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.