கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடிஅரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாதது வருத்தம் அளிக்கிறது என நடிகர் விஜய் பேட்டியின்போது கூறினார்.

சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் எஸ்டூடியோவில் நடிகர் விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள திட்டம் அபாரமானது, வரவேற்கத்தக்கது. இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்கிறேன்.

சில விஷயங்களை செய்தியாக பார்த்தேன். அதில் ஒரு பாட்டி, தனது பேத்தியின் திருமணத்துக்காக வீட்டை அடமானம் வைத்து, வங்கியில் பணத்தை மாற்ற வந்தார். அங்கு அந்த பணம் செல்லாது என கூறியதும் அவர் தற்கொலைக்கு முயன்றார்.

மற்றொரு இடத்தில் ஒரு பெண், தனது மகனுடன் வங்கியில் பணம் மாற்றுவதற்கு சென்றார். அங்கு பணம் செல்லாது என கூறியதும், அவர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார்.

ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு 500 ரூபாய் செல்லாது என கூறியதால், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தார். நாட்டில் 20 சதவீதம் பேர் செய்யும் தவறுக்காக, 80 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் சொல்கிறேன் இந்த திட்டம் சிறப்பான, வரவேற்கத்தக்கது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன், என்னென்ன சம்பவம் நடக்கும் என அறிந்து, அதற்கான தீர்வை ஏற்படுத்தி இருந்தால், சற்று நல்லதாக இருந்து இருக்கலாம்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை இதுவரை யாரும் செய்யாதது. இதுவரை யாரும் யோசிக்காத ஒன்று. இதை நடைமுறை படுத்தியதற்கு பாராட்ட வேண்டியது அவசியம்.

அதே சமயம், கிராமப்புறத்தில் மக்கள் பணத்தை மாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். முதியோர்களுக்கு உள்ள சிரமங்களையும் மத்திய அரசு, கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.