விஜய் மக்கள் இயக்கம் ஏற்கனவே கலைக்கப்பட்டுவிட்டது என்றும் தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். ஆனால், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் எஸ்.ஏ. சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “2021 பிப்ரவரி 28-ஆம் தேதியே விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அன்றைய கூட்டத்திலேயே விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை. அதிலிருந்தவர்கள் விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்கிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்று சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred