இளைஞர்களை ஊக்குவிக்கும் விஜய்..! சத்யா பட வெற்றி விழாவில் சிபிராஜ் புகழாரம்..!
நடிகர் சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “சத்யா“ திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கதாநாயகனும், தயாரிப்பாளருமான சிபிராஜ் , நடிகை ரம்யா நம்பீசன் , வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி, இசையமைப்பாளர் சைமன் K கிங் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , இயக்குநர் அறிவழகன், இயக்குனர் ஆத்விஷேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழா மேடையில் பேசிய சிபிராஜ்:- சத்யா திரைப்படத்தின் பத்திரிகையாளர் ஷோ முடிந்த பின்னர் அனைவரும் என்னுடைய நடிப்பைப் பற்றியும் , படத்தைப் பற்றியும் என்ன சொல்வார்கள் என்று பயத்தோடு இருந்தேன். அனைவரும் பாசிடிவாக கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய நடிப்பை கேலி செய்து படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் படத்தை ரசிகர்கள் அனைவரும் பார்த்து முடிக்கும் போது அனைவரும் என்னுடைய நடிப்பை பாராட்டினார்கள்.
ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. தெலுங்கில் ஷணம் படத்தில் எழுதி நடித்த ஆத்விஷேஷ் இங்கு வந்துள்ளார். ஆத்விசேஷ் தெலுங்கில் நடித்த ஷணம் படத்தை நாங்கள் தமிழில் ரீமேக் செய்திருந்தோம். வருங்காலத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் நான் ரீமேக் செய்யும் ஆவலில் இருக்கிறேன். அதே போல் நான் தமிழில் நடிக்கும் படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்வேன் என்று கூறியுள்ளார்.
ஆத்விசேஷும் நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளோம். எனக்கும் தெலுங்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விஜய் அண்ணா “ சத்யா “ படத்துக்கு நல்ல விமர்சனம் வருவதை பார்த்து என்னை போனில் அழைத்து பாராட்டினார். மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் விஜய் அண்ணா எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை என்றார் சிபிராஜ்.