நடிகர் விஜய் ஆண்டனி, மார்கன் பட புரமோஷனுக்காக மதுரை சென்றிருந்தபோது அங்கு நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் சிக்கியது பற்றி பேசி இருக்கிறார்.
Vijay Antony Speaks About Srikanth controversy : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. ஏற்கனவே மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகிலும் போதைப் பொருள் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தற்போது தமிழ் திரையுலகமும் அதில் சிக்கி உள்ளதால், கோலிவுட்டே விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் சில நட்சத்திரங்களும் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதை வழக்கு பற்றி விஜய் ஆண்டனி சொன்னதென்ன?
இந்த நிலையில், மார்கன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக மதுரை சென்றிருந்த நடிகர் விஜய் ஆண்டனியிடம் திரையுலகில் போதைப்பழக்கம் இருப்பது பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, ரொம்ப நாளாகவே அது இருக்கிறது. உலகம் கண்டுபிடித்ததில் இருந்தே இருக்கிறது. இன்னைக்கு நேத்து இல்ல, இப்போ நம் கூட்டத்தில் கூட ஒருவருக்கு போதைப்பழக்கம் இருக்கலாம். பல நாட்களாகவே சினிமாவில் போதைப்பழக்கம் இருக்கிறது.

உதாரணத்திற்கு சிகரெட் பிடிப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுவும் போதைப்பொருள் தான். அதோடு அடுத்த கட்டம் தான் மற்றவை எல்லாம். இப்போ ஒருவரை பிடித்திருக்கிறார்கள். ஆனால் என்ன உண்மை என்பது உறுதியாகவில்லை. போலீஸ் விசாரணையில் உள்ளதால் அவர் குற்றவாளி என உறுதியாக சொல்ல முடியாது என விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார். சினிமாவில் பல வருடங்களாக போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக நடிகர் விஜய் ஆண்டனி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்கன் பட புரமோஷனில் பிசியான விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் திரைப்படம் வருகிற ஜூன் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை லியோ ஜான் பால் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி உடன் பிரிகிடா, சமுத்திரக்கனி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இப்படத்தை தயாரித்து உள்ளதும் விஜய் ஆண்டனி தான். அதேபோல் இப்படத்திற்கு இசையும் அவர் தான் அமைத்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது பிசியாக நடைபெற்று வருகிறது.
