‘ஜனநாயகத்தில் வன்முறை அச்சுறுத்தல்களை ஏற்க முடியாது’....பத்மாவதி படத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடு ஆதரவு
ஜனநாயகத்தில் வன்முறை அச்சுறுத்தல்களை ஏற்க முடியாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறி இருக்கிறார்.
பத்மாவதி படத்திற்கு எதிராக மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் நிலையில், அதற்கு எதிராக இந்த கண்டனத்தை வெங்கையா நாயுடு கூறி இருக்கிறார்.
டெல்லியில் இலக்கிய விழா ஒன்றில் பேசிய அவர், பத்மாவதி படத்தை பற்றி நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால், இதற்கு முன்பு இதேபோல் மிரட்டல் விடுக்கப்பட்ட ‘ஹரம் ஹவா’, ‘கிசா குர்சி கா’ மற்றும் ‘ஆந்தி’ ஆகிய பட பெயர்களையும் வாசித்து காட்டினார்.
அவர் பேசுகையில் கூறியதாவது-
சில படங்கள் தங்கள் மதம் அல்லது சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக மக்களில் சிலர் உணருகின்றனர். அதனால் எதிர்ப்புகள் கிளம்புகின்றன.
அதற்கு எதிரான போராட்டத்தில் சிலர் பரிசுகளையும் அறிவிக்கின்றனர். இவர்களிடம் ரூ.1 கோடி அளவிற்கு பணம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதே சந்தேகமாக உள்ளது. இது போன்ற வன்முறை அச்சுறுத்தல்களை ஜனநாயகத்தில் ஏற்க முடியாது. சட்டத்தை தங்கள் கையில் எடுத்தக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.