அடக்கு முறையின் மறுமுகத்தை காட்டிய 'களத்தூர் கிராமம்' வெற்றிமாறன் பாராட்டு!
நல்ல படங்களை எப்போதும் தமிழ்சினிமா ரசிகர்களும், ஆர்வலர்களும் ஆதரித்தும் பாராட்டியும் வருகின்றனர். அந்தவகையில் ‘களத்தூர் கிராமம்’ படம் பார்த்தவர்கள் அனைவரும் இந்த படத்தை நல்ல படம் என்று வருகின்றனர்.
அடக்குமுறையின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறது களத்தூர் கிராமம் என இயக்குநர் வெற்றிமாறன் இந்த படத்தை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சீனுராஜ் கூறியதாவது,
“இந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தை பொருத்தவரை எனக்கு மன நிறைவான படம். இரண்டுமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மிகுந்த மன வருத்தத்தையும் நிறைய பொருட்செலவையும் ஏற்படுத்தியது. முதல்முறை போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போன காரணத்தினாலும், இரண்டாவது முறை ரிலீஸ் தேதி அறிவித்தபோது தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாகவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
இளைஞன்.. சினிமாவுக்கு புதியவன்.. திரையரங்குகள் உறுதி செய்யும் போராட்டம் போன்றவை மன அழுத்தத்தின் உச்சத்தில் என்னை கொண்டுபோய் நிறுத்தியது. இருந்தாலும் விடாப்படியாக, ஒரு நல்ல படத்தை மக்கள் மத்தியில் சரியாக கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அக்டோபர்-27ஆம் தேதி படம் 80 திரையரங்குகளில் வெளியானது. இன்று படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கு மன நிறைவை தந்துள்ளது. நல்ல சினிமாவை நேசிக்கக் கூடிய சில திரையரங்க நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது ஆறுதலைத் தந்தது. அவர்களாகவே படத்தைக் கேட்டு வாங்கி திரையிட்டார்கள்.
ஒரு நல்ல படம் மக்களை சென்றடைவதற்கே ஒரு வாரம் தேவைப்படுகிறது. ’ஓப்பனிங் வியாபாரம்’ என்கிற யுத்தியை மட்டுமே கடந்தகால சினிமா கடைப்பிடித்து வருகிறது என்பது வேதனை.. சிறிய படங்களுக்கும் நல்ல படங்களுக்கும் 15 நாட்களாவது அந்தப்படம் திரையிடப்பட்டால், திரையரங்கை விட்டு எடுக்காமல் இருந்தாலே போதும்.. எட்டவேண்டிய வெற்றியை எட்டிவிடும்..
நல்ல படங்களையும் சிறிய படங்களையும் ஓடவைக்கவேண்டிய சாதகங்களை நாம் உருவாக்கியே ஆகவேண்டும். இல்லையென்றால் தமிழ்சினிமாவில் சிறு, குறு பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை நோக்கி மட்டுமே தள்ளப்படுவார்கள்.. அதற்கு ஆவண செய்யவேண்டும்.
மழை மற்றும் இந்த வார வெளியீடுகள் தாண்டி ‘களத்தூர் கிராமம்’ நிலைத்து நிற்பதும், கூடுதல் திரையரங்குகள் கிடைப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய நடிகர்கள் நடித்தால் அல்லது பெரிய தயாரிப்பாளர் படம் என்றாலோ, பெரிய இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள். சில நல்ல படங்கள் வரும்போது அதைப் பார்த்துவிட்டு பாராட்டினால் சிறு படங்கள் வெற்றிபெறும். இயக்குநர் வெற்றிமாறன் விதிவிலக்காக எங்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. அவருக்கு நன்றி!” என்று தயாரிப்பாளர் A.R. சீனுராஜ் கூறினார்.