Maanaadu 2 : வந்துச்சு.... ஹிட்டாச்சு... ரிப்பீட்டு - ‘மாநாடு 2’ நிச்சயம் உருவாகும்.... வெங்கட் பிரபு உறுதி
மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் டுவிட்டர் ஸ்பேஸஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.
சிம்புவின் படங்கள் என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்தது தான், அந்த வகையில் பல சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில், கடந்த மாதம் 25-ந் தேதி வெளியான திரைப்படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.
ரிலீசுக்கு முன்னர் பல்வேறு தடைகளை சந்தித்த இப்படம், அதன் வெற்றியால் தற்போது அவை அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி உள்ளது. சிம்புவின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு, இப்படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு திரைப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
இந்நிலையில், மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் டுவிட்டர் ஸ்பேஸஸ் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது மாநாடு படத்தின் 2-ம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.
தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னர் மாநாடு இரண்டாம் பாகத்தை தொடங்க உள்ளதாகவும், அந்த படத்திலும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நிச்சயம் நடிப்பார்கள் எனவும் வெங்கட் பிரபு உறுதிபட தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.