‘வென்று வா வீரர்களே’... யுவனின் ஒலிம்பிக் பாடலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்...!
ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றுள்ள தமிழக வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவதற்காக பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.இதில் வரலாற்றில் முதல் முறையாக, தமிழகத்தில் இருந்து, 11 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப்போகும் தடகள வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஏற்கனவே தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்நிலையில் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மூலமாக பாடல் ஒன்றை தமிழக கூடைப்பந்து கழகம் தயாரித்துள்ளது. ‘வென்று வா வீரர்களே’ எனத் தொடங்கும் அந்த பாடல் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி உடன் நிறைவடைகிறது. இன்று அந்த பாடலை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டியில் 25 பதக்கங்களையாவது பெற வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டம் என்றும், தமிழகத்தில், நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதன் மூலமாக 6 வயது முதல் 14 வயது உள்ள விளையாட்டு ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வறுமையிலும் சாதித்த சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோர் தமிழகம் திரும்பியது அரசு பணிக்கான நியமான ஆணையை முதலமைச்சர் வழங்குவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.