முடிவு எடுக்க முடியாத சூழல்... பிரச்சனையில் சிக்கி தவிக்கும் நடிகர் வடிவேலு..!
நடிகர் வடிவேலு:
தமிழ் சினிமாவில் தனக்கென தனி காமெடி பாணியையே உருவாக்கியவர் வைகை புயல் வடிவேலு. இவருடைய வசனங்கள் தான் இன்று பல மீன்ஸ் கிரியேட்டர்களை வாழ வைத்து வருகிறது என்று கூட கூறலாம்.
நடிகர் செந்தில் கவுண்டமணியைத் தொடர்ந்து ரசிகர்களை அதிகம் சிரிக்க வைத்த பெருமை நடிகர் வடிவேலுவை தான் சேரும். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அனைவரும் வடிவேலுவைத் தான் தன்னுடைய படத்தில் காமெடியனாக நடிக்க வைக்க வேண்டும் என கூறிய காலங்களும் உண்டு.
நல்ல மனிதர்:
நடிப்பில் முன்னணி காமெடியன், பல லட்சம் சம்பளம் என ஆடம்பர வாழ்கை வாழ்வதற்கு அனைத்தும் வாய்த்திருந்தாலும். என்றும் பிறந்த ஊரின் மண் மனம் மாறாதவர் வடிவேலு. இவர் மிகவும் எளிமையான மனிதர் என்பது அவருடன் பழகிய அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
ஹீரோவாக வடிவேலு:
நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்த '23ம் புலிகேசி' திரைப்படம் மிகபெரிய வெற்றி பெற்றதால் தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க முடிவு செய்தார். பல படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்புகள் வந்த போதும் அதனை மறுத்து விட்டார்.
இந்த படத்தைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த 'தெனாலி ராமன்' , 'எலி' போன்ற படங்கள் தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து அதிகமான படங்களில் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் 'கத்தி சண்டை' படத்தின் மூலம் காமெடியனாக நடித்தார் ஆனால் இந்த படம் இவருக்கு கைகொடுக்கவில்லை.
24ஆம் புலிகேசி:
இந்நிலையில், வடிவேலுவை ஹீரோவாக வைத்து 24ஆம் புலிகேசி படத்தை இயக்க இயக்குனர் சிம்பு தேவன் முடிவு செய்திருந்தார். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்க இருந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக வடிவேலு இந்த படத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நடித்துக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது.
பிரச்சனையில் வடிவேலு:
இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு, வடிவேலு தான் காரணம் என்று கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழுவினர் புகார் கொடுத்தனர். இவரது பிரச்னையை விசாரித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், வடிவேலு இந்த படத்தில் நடித்து கொடுக்க வேண்டும் அல்லது நஷ்டத்தை ஏற்க வேண்டும் என கூறியுள்ளது. இரண்டில் எதையும் செய்ய முடியாமல் நடுவில் திண்டாடி வருகின்றாராம் வடிவேலு.