வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்த வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
Is Vaadivaasal Movie Dropped? தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் வாடிவாசலும் ஒன்று. இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்குவார் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். கிட்டத்தட்ட இந்த அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் அதன் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை.
செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்க இருந்தார் வெற்றிமாறன். இப்படத்திற்காக டெஸ்ட் ஷூட்டும் நடத்தினார். அதில் சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சூர்யா இப்படத்திற்காக 2 காளைகளை வாங்கி அதை தன் வீட்டில் வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. அதேபோல் இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தின் சிஜி பணிகளை லண்டனில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கைவிடப்படுகிறதா வாடிவாசல்?
இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவத் தொடங்கி உள்ளது. நடிகர் சூர்யாவும் அடுத்தடுத்து பல்வேறு இயக்குனர்களுடன் பணியாற்றி வருவதால், வாடிவாசல் உருவாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி படக்குழு எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறது. வாடிவாசல் கைவிடப்பட்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாவதால் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வெற்றிமாறனின் அடுத்த படம் யாரோடு?
வாடிவாசல் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சிம்பு உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணி உறுதியானால் சிம்புவும், வெற்றிமாறனும் இணையும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
