மலையாளத்தில் இருந்து சிறந்த படைப்பாகக் கருதப்பட்ட ஆடுஜீவிதம் தேசிய விருதுகளில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது குறித்து ஊர்வசி கருத்து தெரிவித்துள்ளார்.

Aadujeevitham National Award Controversy : தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதில், திரையுலகில் இருந்து எழுந்த சில விமர்சனங்களில் ஒன்று நடிகை ஊர்வசியுடையது. இந்த ஆண்டு விருது வென்றவர்களில் ஒருவரான ஊர்வசியின் விமர்சனம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. தனக்கும் விஜய ராகவனுக்கும் சிறந்த துணை நடிகர்/நடிகைக்கான விருது வழங்கப்பட்டதைக் கேள்வி எழுப்பினார் ஊர்வசி. உள்லொழுக்கு படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தை எப்படி துணை கதாபாத்திரமாகக் கருத முடியும் என்பது ஊர்வசியின் விமர்சனத்தின் சாராம்சம். அதேபோல் பூக்காலத்தில் விஜய ராகவன் ஏற்ற கதாபாத்திரமும் எப்படி துணை நடிகராக கருதப்பட்டது என ஊர்வசி கேள்வி எழுப்பினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகை ஊர்வசி சரமாரி கேள்வி

அதேபோல் மலையாளத்தில் இருந்து சிறந்த படைப்பாகக் கருதப்பட்ட ஆடுஜீவிதம் தேசிய விருதுகளில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது குறித்து ஊர்வசி கருத்து தெரிவித்துள்ளார். “ஆடுஜீவிதத்தை எப்படி அவர்களால் புறக்கணிக்க முடிந்தது? நஜீபின் வாழ்க்கையையும் அவர் அனுபவித்த துன்பங்களையும் சித்தரிக்க தனது நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணித்து, உடல் ரீதியான மாற்றத்திற்கு உள்ளான ஒரு நடிகர் இருக்கிறார். அவருக்கு தேசிய விருது கிடைக்காததற்கு எம்புராண் திரைப்படம்தான் காரணம் என்று நாம் அனைவரும் அறிவோம். விருதுகளை அரசியலாக்க முடியாது”, என்று ஊர்வசி கூறினார்.

“முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்கு துணை நடிகர்/நடிகைக்கான விருது வழங்கப்பட்டால், உண்மையான துணை நடிகர்களுக்கு என்ன நடக்கும்? தங்கள் கலையை மேம்படுத்த அவர்களுக்கு எங்கிருந்து உத்வேகம் கிடைக்கும்? கதாபாத்திரம் முக்கியமானதா அல்லது துணை வேடமா என்பதை அவர்கள் எப்படி அளவிடுகிறார்கள்?”, என்று ஊர்வசி கேள்வி எழுப்புகிறார்.

முன்னதாக, அச்சுவிண்டே அம்மா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தனது அனுபவத்தை ஊர்வசி பகிர்ந்து கொண்டார்- “அச்சுவிண்டே அம்மா படத்தின்போது நடுவர் குழுவில் இருந்த நடிகை சரோஜா தேவி சிறந்த நடிகைக்கான விருதுக்கு எனக்காக வாதிட்டார். அது துணை கதாபாத்திரம் அல்ல, அச்சுவிண்டே அம்மா என்ற தலைப்பே முக்கிய கதாபாத்திரம் என்று வாதிட்டார். ஆனால் அவரது கருத்து மேலோங்கவில்லை. அன்று சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெறச் சென்றபோது, என்னை தனது அறைக்கு அழைத்து இதை நேரில் கூறினார். நமக்காகப் பேச ஆளிருந்தாலும், அங்கிருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும் என்பதுதான் நிலைமை”, என்று ஊர்வசி கூறியிருந்தார்.