பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் !! யூனிசெஃப் –ன் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட திரிஷா பேட்டி !!!
சினிமா நடிகையாக மட்டும் இல்லாமல், பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலம் என பலவேறு துறைகளில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் நடிகை திரிஷா தமிழக மற்றும் கேரள மாநிலங்களுக்கான யூனிசெஃப் –ன் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் , குழந்தைகள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் திரிஷா தெரிவித்துள்ளார்.
1999-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்ற பின் திரிஷா தனது திரைப் பயணத்தை ஒருவித தயக்கத்துடன் தான் தொடங்கினார். ஆனால் அவரது தமிழ் முகம், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற குறும்பான தோற்றம் கோலிவுட்டில் அவருக்கான இடத்தை கிட்டத்தட்ட 18 வருட காலம் தந்துள்ளது.
சினிமா துறையில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ள திரிஷா. மீடியாவில் எந்த அளவுக்கு புகழப்பட்டாரோ அந்த அளவுக்கு கிசுகிசு, சர்ச்சை போன்றவற்றிலும் சிக்கியுள்ளார்.
பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அவர் திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்க முடியாமல் போனது.
இது போன்ற பல பிரச்சனைகளில் அவர் பாதிக்கப்பட்டாலும் தனது போராட்ட குணத்தை திரிஷா ஒருபோதும் கைவிட்டதில்லை. பல முன்னணி நடிகர்களுடன் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் வெளிவந்து பெறும் வெற்றி பெற்ற படங்கள் சாமி, கில்லி, உனக்கும் எனக்கும், கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், அரண்மனை 2 போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சினிமாவைத் தாண்டியும் சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடன் செயல்பட்டு வருபவர் திரிஷா. பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலம் என அவரது பங்களிப்பு சமுதாயத்தில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யூனிசெஃப் அமைப்பு திரிஷாவுக்கு செலிப்ரிடி அட்வகேட் என்ற பதவியை வழங்கியுள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான யூனிசெஃப் –ன் நல்லெண்ண தூதராக திரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சென்னையில் யூனிசெஃப் சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகள் தின விழாவில் நடிகை திரிஷா திரிஷா கலந்து கொண்டார். இடிதத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் பாலியல் கல்வி கற்றுக் கொடுப்பது அவசியம் என தெரிவித்தார்.
குழந்தைகள் பள்ளிகளில் ஜாலியாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்களோ அதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும என தெரிவித்தார். ஆண் குழந்தைகள் வளர்ப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும், கிராமப் புற குழந்தைகளுக்கு கல்வி அறிவு அவசியம் என்றும் திரிஷா தெரிவித்தார்.