ஜோதிகாவின் அடுத்த படம் இது தான்; ”மொழி” ராதா மோகன் இயக்கத்தில் ”காற்றின் மொழி”
தமிழ் திரையுலகில் தனக்கு என ஒரு தனி இடத்தை தனது நடிப்பு திறமையால் உருவாக்கியவர் நடிகை ஜோதிகா. வெற்றிகரமாக அவரது திரையுலக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த போதே, நடிகர் சூர்யாவை மணந்து கொண்டு, திரைத்துறையில் இருந்து சில காலம் விலகி இருந்தார் ஜோதிகா. 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரைக்கு வந்த இவர், மகளிர் மட்டும், நாச்சியார் என மிக குறைவான படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அவ்வாறு ஜோதிகா தேர்வு செய்து நடித்த எல்லா படங்களுமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதிலும் நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் ஆக்ஷன் கலந்த நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. இவங்க பெண் சிங்கம் என சூர்யாவிடமே நேரில் புகழ்ந்திருக்கின்றனர் பலர்.
தற்போது ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் என்ன? என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஜோதிகா அடுத்ததாக் நடிக்கவிருக்கும் படம் பாலிவுட்டில் ”வித்யா பாலன்” நடித்து சூப்பர் ஹிட் ஆன ”தும்ஹாரி சுலு” எனும் படம் தான்.
இந்த திரைப்படத்திற்கு தமிழில் ”காற்றின் மொழி” என பெயரிட்டிருக்கின்றனர். ஜோதிகா முன்னர் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் மொழி. அந்த திரைப்படத்தை இயக்கிய ராதா மோகன் தான் காற்றின் மொழி படத்தையும் இயக்கவிருக்கிறார்.
இத்திரைப்படத்திற்கான பூஜை இன்று தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன் தான், ”காற்றின் மொழி” ஆரம்பிக்கவே செய்திருக்கிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.