’பிகில்’படப்பிடிப்பில் காயமடைந்த எலெக்ட்ரீஷியன் மரணம்...படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டுப் பறந்த விஜய்...
விஜய்யின் பிகில் பட படப்பிடிப்பின் போது,கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய எலெக்ட்ரீஷியன் செல்வராஜ்(52) என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை மரணமடைந்தார்.
விஜய்யின் பிகில் பட படப்பிடிப்பின் போது,கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய எலெக்ட்ரீஷியன் செல்வராஜ்(52) என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை மரணமடைந்தார்.
நடிகர் விஜய்யின் பிகில் பட செட் வேலைகள் செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்து வந்தபோது அதில் ஏராளமான ஊழியர்கள் இரவு-பகலாக இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஏப்ரல் 23ம் தேதி இரவு 100 அடி உயரத்தில் கிரேனில் அதிக திறன்கொண்ட மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ்(வயது 52) என்பவர் ஈடுபட்டு வந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக 100 அடி உயரத்தில் கிரேனில் கட்டப்பட்டு இருந்த மின்விளக்கு கழன்று, கீழே நின்று கொண்டிருந்த செல்வராஜ் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், மயங்கினார்.
இதனால் பதறிப்போன சகஊழியர்கள் செல்வராஜை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தார்கள்.அந்த தகவல் அறிந்ததும் நடிகர் விஜய், தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று செல்வராஜிடம் நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் நேற்று (ஆக. 9) மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார். மாலை இத்தகவல் கிடைத்தவுடன் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செல்வராஜ் உடலைப் பார்க்க கிளம்பியுள்ளனர். பின்னி மில்லில் ’பிகில்’ படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தகவல் அறிந்தவுடன் விஜய் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி கிளம்பியிருக்கிறார்.