பாரதிராஜா, கவுதம் மேனன், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன' படத்தை பிரபலங்களுடன் சேர்ந்து குடும்பமாக பார்த்து ரசிக்க, படக்குழு பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
அழகி, பள்ளிக்கூடம் போன்ற தனித்துவமான படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதிவு செய்துள்ள இயக்குனர் தங்கர் பச்சான், தொடர்ந்து மக்களின் மனதுக்கு மிக நெருக்கமான, உணர்வுப்பூர்வமான படங்களை கொடுத்து வருபவர். அந்த வகையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன'.
பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தங்கர் பச்சானின் படங்கள் என்றாலே மனித உறவுகளின் மேன்மையை, குடும்பங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இருக்கும் என்பதால் யதார்த்த மனிதர்களிடம் அவரது படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.

அதனால் ‘கருமேகங்கள் கலைகின்றன' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்திய திரையுலக வரலாற்றிலேயே ஒரு புது முயற்சியாக ரிலீஸுக்கு ஒரு வாரம் முன்னதாக இப்படத்திற்கான குடும்ப காட்சி (Family Show) ஒன்றை திரையிட ஏற்பாடு செய்துள்ளார். பொதுவாக ஒரு படம் வெளியாகும் முன் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் காண்பிக்கப்படுவது வழக்கம். ஆனால் முதல்முறையாக பொது மக்களுக்காக திரையிடப்படும் இம்முயற்சி அனைவரையும் மிகவும் வியப்பிற்குள்ளாக்குகிறது.

கவனம் பெற்ற இந்த சிறப்பு காட்சியை, ஆர்வமுள்ள ரசிகர்களுக்குள் போட்டிக்கான நிபந்தனைகளை அறிவித்து தகுதியானவர்களை தேர்வு செய்து சென்னை கமலா தியேட்டரில் திரையிட இருக்கிறார். வருகிற 26ம் தேதி நடக்கும் இந்த சிறப்பு குடும்ப காட்சி, போடப்படுகிறது. இந்த சிறப்பு திரையிடலின் போது, படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கான்டஸ்டில் கலந்து கொள்ள, விருப்பம் உள்ளவர்கள் தங்களின் குடும்ப புகைப்படத்தை... 99624 1877 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதில் கலந்து கொள்பவர்களின் குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கர் பச்சானின் இந்த புதிய முயற்சி எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
