#BREAKING ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த தயார் ஆனால்.. நீதிமன்றத்தில் ஒரேபோடாய் போட்ட விஜய்...!
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த ஏண்டும் என்ற உத்தரவை தான் எதிர்க்கவில்லை என்றும், தன் மீதான விமர்சனங்களை நீக்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தான், தானும் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை தான் முழுமையாக ஏற்பதாகவும், நீதிமன்றத்தை நாடியதற்காக விதித்த ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் தனி நீதிபதியின் விமர்சனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் முன்வைத்தார்.
இதையும் படிங்க: யாஷிகா ஆனந்திற்கு அறுவை சிகிச்சை... அக்காவின் உடல் நிலை பற்றி தங்கை பகிர்ந்த உருக்கமான பதிவு...!
ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடை உள்ளதால் இன்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், பணம் வைத்திருப்பவர்களுக்கு அதை பயன்படுத்தவும் உரிமை உண்டு, ஆனால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கருத்துகளை கூறிவிட்டு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து விட்டார் நீதிபதி என விஜய் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.