கடந்த சில நாட்களாகவே விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்து ஊடகங்கள், சோசியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’’என கண்டனம் தெரிவித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஒரு லட்சம் அபராத தொகையை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். நடிகர் விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூற ஆரம்பித்தனர். வரி விலக்கு கேட்ட விஜய்யை வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக சிலர் சோசியல் மீடியாக்களில் கிளப்பிவிட்டனர். 

கடந்த சில நாட்களாகவே விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்து ஊடகங்கள், சோசியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் சொகுசு கார் வரி விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளார். வரி செலுத்தக்கூடாது என்பது விஜய்யின் நோக்கமல்ல என்றும், இந்திய குடிமகனுக்கான உரிமையை தான் விஜய் கோரியதாகவும் அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ள சில ஆட்சேபமான கருத்துக்கள் குறித்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், மன வருத்தமளிக்கும் கருத்துகளை நீதிபதி தெரிவித்திருக்க கூடாது என்றும் விஜய் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.