அரசு சொன்னால் கேட்டுக்குறோம்.. அனுமதி மட்டும் தாங்க... முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை...!
அரசு அளிக்கும் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்கம் திறக்க தயாராக உள்ளதாகவும், விரைவில் அரசு அனுமதி அளிக்கும் எனவும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மிகவும் பலனளித்தது. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதை முன்னிட்டு, பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. சமீபத்தில் கூட அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்துக்கு அனுமதி, உணவங்களில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிடலாம், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை, வழிபாட்டுத் தலங்கள் திறப்பு என மக்கள் எதிர்பார்த்த பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் அலைக்கழிக்கப்பட்டது போலவே இந்த முறையும் தியேட்டர் உரிமையாளர்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது: திரையரங்க உரிமையாளர்களின் சிரமத்தை எடுத்து கூறியதாகவும், அதனை பொறுமையாக கேட்டறிந்த முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தியேட்டர்களை திறக்க அனுமதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
அரசு அளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தியேட்டர்களை திறக்க தயாராக உள்ளதாகவும், இந்தியாவிலேயே குறைவான கட்டணத்தோடு திரையரங்கை இயக்குவது தமிழகத்தில் மட்டும் தான் எனவும், இந்த கட்டணம் போதுமானதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். திரையரங்கத்தின் உரிமத்தை ஒரு வருடம் புதுப்பித்து தர முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், நிச்சயம் செய்து தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார் என்றும், ஓ.டி.டியால் திரையரங்கம் அழியாது எனவும் கூறினார்.