தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கான தேர்தல் முடிந்த பின்னர் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாம்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில், தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும் களமிறங்க உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரு அணிகள் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, கே.பாக்யராஜ் அணியில் அவர் தலைவராக போட்டியிட உள்ளார். செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட்பிரபு போட்டியிடுகின்றனர். இந்த அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.மாதேஷ், எஸ். எழில் இருவரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

இணைச்செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார்,
மனோபாலா, சரண் , திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உட்பட 19 பேர் போட்டியிடுகின்றனர். இணைச்செயலாளர் பதவிக்கு சுயேச்சையாக ஆர்.அரவிந்தராஜ் போட்டியிடுகிறார்.

கடந்த மாதம் 24-ந் தேதி நடைபெற இருந்த இயக்குனர் சங்க தேர்தல், கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதன் காரணமாக வருகிற பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை கேகே நகரில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஓட்டுப்போட தகுதி உள்ளவர்கள் 2400 பேர். தேர்தல் முடிந்த பின்னர் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாம்.