ரோபோ சங்கர் மரணமடைந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பிரபல இயக்குனர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ள தகவல் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Director RD Narayanamurthy Death : தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 59. கடந்த வாரம் தான் நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது நாராயண மூர்த்தியின் மறைவும் தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஆர்.டி.நாராயணமூர்த்தி காலமானார்
கடந்த ஒரு வாரமாக சென்னையின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், உடல் நலத்தில் முன்னேற்றம் காணாமல் நேற்று இரவு 8.30 மணியளவில் மரணமடைந்தார். 2001ஆம் ஆண்டு வெளிவந்த மனதை திருடிவிட்டாய் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நாராயணமூர்த்தி. பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற கிளாசிக் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

இதன் பின்னர் ஒரு பொண்ணு ஒரு பையன் படத்தை இயக்கிய அவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி உள்பட சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி இருக்கிறார். இயக்குனர் நாராயணமூர்த்திக்கு அம்சவேணி என்கிற மனைவியும், லோகேஸ்வரன் என்கிற மகனும் உள்ளனர். தற்போது நாராயணமூர்த்தியின் மகன் லண்டனில் பணிபுரிந்து வருவதால் அவர் சென்னை திரும்பிய பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையுலகில் தனித்துவமான கதைக்களங்களைத் தேர்வு செய்து ரசிகர்களுக்கு படங்களை அளித்த நாராயணமூர்த்தியின் மறைவு, தமிழ்சினிமா உலகுக்கே பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
