வெற்றிக்கு பின்னும் ஓயாத பிரச்சனை... ‘மாநாடு’ தயாரிப்பாளரின் செயலால் கடுப்பான TR - கோர்ட்டில் வழக்கு போட்டார்
சென்னை 20வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் (T rajendar) மாநாடு (maanaadu) திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
நடிகர் சிம்பு (simbu) நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி (suresh kamatchi) தயாரிப்பில் உருவான "மாநாடு" (Maanaadu) திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியாகி உலகமெங்கும், மற்றும் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே.
ஆனால் அந்த திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய தினம் நவம்பர் 24ம் வேறு தேதி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்திற்கு ஏகப்பட்ட பைனான்ஸ் பிரச்சனை, பணச்சிக்கல் இருப்பதாகவும் வழியில்லாததால் பெருத்த மன வலியோடு படம் நாளைய தினம் வெளியாகாது. படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கிறேன் என்று அதிரடியாக டிவிட்டரில் டிவிட்செய்தார்.
இந்த நிலையில் மாநாடு படத்தை வெளியிட காத்திருந்த உலகெங்கிலும் மற்றும் தமிழ்நாட்டில் இருக்ககூடிய திரையரங்க உரிமையாளர்களும் படத்தை வாங்கியிருந்த பட விநியோகஸ்தர்கள் பலரும், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பொது செயலாளராகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவராகவும் இருக்கக்கூடிய டி.ராஜேந்தரை தொடர்பு கொண்டு எப்படியாவது தலையிட்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் விநியோகஸ்தர்களுக்கும் மாநாடு வெளியிட உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கும் கை கொடுக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று டி.ராஜேந்தரும், சிம்புவின் தாயாரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் உஷா ராஜேந்தரும் படத்தை கொண்டு வர களம் இறங்கி அன்று விடிய விடிய கொட்டும் மழையையும் மிறீ போராடினார்கள். 25ம் தேதி காலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 5 மணி காட்சி பல திரையரங்களில் ரத்தாகி ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.
இந்த பதட்டமான சூழ்நிலையில் படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் கணக்கில் மாநாடு படத்தின் நெகட்டிவ் மீது 5 கோடி பாக்கி தொகை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தரவேண்டும். இந்த படத்தின் சாட்டிலைட் விற்காத காரணத்தால் இன்றைய நிலையில் சாட்டிலைட் மதிப்பான 5 கோடி ரூபாய் குறைவாக உள்ளது. இதை டி.ராஜேந்தர் அவர்கள் தான் பொறுப்பேற்று கொண்டு அவரது மகன் T.R.சிலம்பரசன் நடித்து ஐசரி கணேஷ் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் படத்தின் வெளியீட்டின் போது தருவதாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
மேலும் சாட்டிலைட் உரிமையை விற்று ஒரு வேளை படம் 5 கோடிக்கு கீழே விற்றால் குறைவது எத்தனை கோடியானாலும் அதை டி.ராஜேந்தர்தான் தரவேண்டும் என்று உத்திரவாத கடிதத்தை (கேரண்டி கடிதம்) உத்தம் சந்த் அவர்களே தன் கைப்பட எழுதி டி.ராஜேந்தர் அவரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி கையொப்பமிட மற்றும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் திரு.சௌந்தரபாண்டியன் சாட்சி கையொப்பமிட அந்த உத்தரவாத கடிதத்தை பெற்றுக்கொண்டு காலை 8 மணி காட்சிக்குத்தான் மாநாடு படத்தை வெளியிட்டனர்.
ஆனால் இந்த படம் வெளியாகாது என்று தயாரிப்பாளர் டிவிட்டரில் அறிவித்த பின்னும் டி.ராஜேந்தரும், அவரது மனைவி உஷாராஜேந்தரும் போராடியதற்கு பின்னால் எல்லாம்வல்ல இறைவன் அருளால் படம் வெளியாகி வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. காட்சி மாறியது. படம் வெற்றிபெற்ற காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் தருணத்தில் படத்தின் பைனான்சியர் உத்தம சந்த்தும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியும் டி.ராஜேந்தருக்கு தெரிவிக்காமலேயே சில தனியார் தொலைக்காட்சிக்கு சாட்டிலைட் உரிமையை விற்பதற்கு முற்பட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் சென்னை 20வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கனம் நீதிபதி அவர்கள் முதல் பிரதிவாதி உத்தம் சந்த் அவர்களும், இரண்டாவது பிரதிவாதி மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி அவர்களும் உரிய பதில் அளிக்குமாறு வழக்கை வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கிறார்.