ஒளிபரப்பு திருத்த சட்ட வரைவை எதிர்பார்வர்களை கடுமையாக விமர்சித்து எஸ்.வி.சேகர் பேசியுள்ளார். 

ஒளிபரப்பு திருத்த சட்டம் கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஜூலை 2ம் தேதி வரை புதிய சட்ட திருத்த வரைவின் மீதான கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். மேலும் நடிகர்கள் சூர்யா, கமல் ஹாசன் உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தமிழ் திரையுலகில் ஒளிபரப்பு திருத்த சட்ட வரைவை எதிர்த்து குரல் கொடுத்து வரும் நடிகர்கள், இயக்குநர்களை எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், படம் சென்சார் ஆன பிறகு கூட நாட்டின் இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் இருந்தால் ரீ- சென்சார் செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்ய முடியும். இதற்கு தான் தமிழகத்தில் சிலர் எதிராக கூச்சலிடுகின்றனர். ஏற்கனவே விஸ்வரூபம், மெட்ராஸ் கபே, டேம் 999 ஆகிய படங்கள் சென்சார் செய்யப்பட்ட படங்கள், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. 

நம்முடைய தேசத்தின் இறையாண்மைக்கு தவறான படங்களை தடை செய்யும் உரிமை மத்திய அரசு இருப்பதில் என்ன தவறு உள்ளது. போலீசை பார்த்து திருடனும், ரவுடியும் தான் பயப்படுவாங்க. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, லஞ்ச பணம், கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான் எதிர்த்தார்கள். அதேபோல் தான் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை படமாக எடுப்பவர்கள் தான் பயப்படுகிறார்கள். 

மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் செய்யப்பட்ட சட்டத்தை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு என்பதால் இது தனி நாடு அல்ல, ஒரு மாநிலம் அவ்வளவு தான். தமிழர் இறையாண்மை, தெலுங்கர் இறையாண்மை, கன்னடர் இறையாண்மை என்றெல்லாம் கிடையாது. இந்தியாவில் இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் அதுக்கு உட்பட்டு தான் அனைத்தையும் செய்ய வேண்டும். வெளிநாட்டுக்காரன் கொடுக்கும் காசுக்காக கூவுவதாக இருந்தால், அங்க போய் தான் கூவனும், இங்க பிறந்து வளர்ந்து, வளர்ந்து, சம்பாதிச்சி, சொத்து சேர்த்து இந்திய அரசுக்கு எதிராக பேசினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசனுன்னா பாகிஸ்தான் போங்க, இங்கிருந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம் எழுப்ப சென்சார் போர்டு அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.