ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம் நிறைவேறியது… முதல்வருக்கு நன்றி தெரிவித்த சூர்யா!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருப்பதாக நடிகர் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கூட்டத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் தான் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தை இயக்கியுள்ளார். சூர்யாவின் பிறந்தநாளன்று இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டது. சான் ரோல்டன் படத்திற்கு இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில், பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடக்கூடிய வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளதாகவும், நீதியரசர் சந்துரு என்ற வழக்கறிஞர் தான் பணியாற்றியபோது, வாதாடப்பட்ட முக்கிய வழக்கை மையமாக வைத்து ஜெய்பீம் படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. சாதி வெறிக்கு எதிரான அழுத்தமான வசனங்களுடன் வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் திரையோடு மட்டும் நின்றுவிடாமல் நிஜத்திலும் பழங்குடி இன மக்களின் நிலையை மாற்ற நினைத்த சூர்யா, இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஸ்டாலினை நேரில் சந்தித்த சூர்யாவும் - ஜோதிகாவும் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர். அவர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதியும் உடன் இருந்தார். அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இப்படத்தின் காட்சிகள் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் அதுக்குறித்து தனது டிவிட்டரில் கருத்து பகிர்ந்திருந்தார்.
அவரது பதிவில், ஜெய்பீம் படம் தன் மனதைக் கணமாக ஆக்கிவிட்டதாகவும் விளிம்புநிலை இருனர் மக்களின் வாழ்வியலையும் , அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக , கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயனது என்பதைக் காட்டிவிட்டீர்கள் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும் நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது என்று கூறிய மு.க.ஸ்டாலின், இந்தப் படம் சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது என்றும் இக்கதையைத் தேர்வு செய்ததும் , அதனைப் படமாக எடுத்ததும், அதில் தானே நடிந்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார் என்றும் தெரிவித்தார். கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உணர்வுப்பூர்வமான பாராட்டு ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் பதிவுக்கு ட்விட்டர் வாயிலாக நடிகர் நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா, வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.