டாஸ்மாக் திறந்தால் ஆட்சி கனவு அவுட்... எடப்பாடிக்கு ரஜினி எச்சரிக்கை...!
உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களையும் மீறி போலீஸ் பந்தோபஸ்துடன் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நாளில் அண்டை மாநிலங்களைவிட, தமிழகம் மதுபான விற்பனையில் சாதனையும் புரிந்தது. ஆனால் பல்வேறு விமர்சனங்களை தமிழக அரசு சந்தித்தது. மதுக்கடைகளை திறக்க கூடாது என்று பொதுநல வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது மதுக்கடைகளில் எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என்பதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் நீதிபதியின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அத்துடன் மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. டாஸ்மாக்கை திறந்த மறுநாளே நீதிமன்றம் இப்படி உத்தரவிடும் என்பதை தமிழக அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் ஆன்லைன் மூலமாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளை அமல்படுத்தி மது விற்கப்பட்டது என்றும், ஒரு சில இடங்களில் விதிமீறல்களை அமல்படுத்தி ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல என்றும்’’ குறிப்பிடப்பட்டது.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். டாஸ்மாக் விவகாரத்தில் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், டாஸ்மாக்கை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மறந்துவிடுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.