#BREAKING ‘விவேக் உடன் நடித்ததை என் வாழ் நாட்களில் மறக்க முடியாது’... ரஜினிகாந்த் உருக்கம்...!
நடிகர் விவேக்கின் மரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது, சமூக சிந்தனையாளராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் வலம் வந்தவர் விவேக். நேற்று விருகம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வந்தது.
விவேக்கின் இதயத்துடிப்பு குறைவாக இருந்ததை அடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சின்னக் கலைவாணர் விவேக்கின் மரணத்தை அடுத்து அவருடைய ரசிகர்கள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, மனோபாலா, நாசர், யோகிபாபு, மயில்சாமி மற்றும் நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் விவேக்கின் மரணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. 'சிவாஜி'படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.